வியாழன், 20 ஜனவரி, 2011

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைது செய்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிக்கை.

சுவாமி அசிமாந்தாவின் வாக்குமூலத்தின் மூலம் நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ன் மேல்மட்ட தலைவர்கள் சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தீவிரவாதத்தின் பாசறையாக செயல்பட்டுவரும் ஆர்.எஸ். எஸ் தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் சம்ஜோத்தா ரயில் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய தலைவர்களின் பங்கை உறுதி செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய தலைமை நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த குழு அமைத்து அதன் தேசிய காரிய கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. எனினும் தேசத்திற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இந்திரேஷ் குமாரை இன்னும் கைது செய்யவும் இல்லை.சம்பந்தப்பட்ட பிற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை வெளியிடவும் இல்லை.

மத்திய அரசாங்கம் 1992க்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் பங்கு உள்ளதா? என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இ.எம்.அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். பாப்புலர்ஃப்ரண்ட் கடந்த சில வருடங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் இன்னும் இவ்வழக்கில் ஏற்கெனவே போலியாக சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை இன்னும் திரும்பப்பெறவுமில்லை. அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியே விடவுமில்லை என்பது வருந்தத்தக்கது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பதை விட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை முன்பே முயற்சி செய்திருந்தால் தொடர்ச்சியாக நடைபெற்ற தீவிரவாத செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும்.அதனால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் சமூக மற்றும் தேசத்தின் நலன்கருதி ஆர்.எஸ்.எஸ்ன் ஷாகா வகுப்புகள் மற்றும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக