திங்கள், 23 ஜனவரி, 2012

பாலஸ்தீன மக்களின் கண்ணீர் வரலாறு!

கடந்த 2010 டிசம்பர் 2 ஆம் தேதி தில்லியிலிருந்து பாகிஸ்கிதான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும், ஏறக்குறைய 8,000.கி.மீ. பயணித்து காஸா சென்ற இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் ஆ.முத்துக்கிருஷ்னன் மட்டுமே. காஸாவில் அவர் கண்ட காட்சிகளையும், அங்கு மக்கள் படும் துயரங்களையும், அரசியல் நிலைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.


கேள்வி: பாலஸ்தீன் குறித்த முதல் அறிமுகம் உங்களுக்கு எப்போது கிடைத்தது? இப்பிரச்சினையுன் பக்கம் உங்கள் கவனம் முதன் முதலாக எப்போது திருப்பியது?

பதில்: பாலஸ்தீனம், யாசர் அரஃபாத் ஆகிய வார்த்தைகள் என் பள்ளிப் பருவத்திலேயே எனக்கு அறிமுகம் ஆயின.. பாலஸ்தீனம் இந்த உலகத்தில் எங்கோ இருக்கும் ஒரு நாடாகவும், யாசர் அரஃபாத் இந்திரா காந்தியுடன் நிற்கும் புகைப்படங்களை நோளிதழ்களில் பார்த்து, அவர் ஒரு சர்வதேச தலவராகவும் மனதில் ஏற்பட்ட மங்கலான பதிவுகள்தான் முதல் அறிமுகங்கள். என்.ராமகிருஷ்ணன் எழுதிய 'நீதிக்காகப் போராடும் பாலஸ்தீன மக்கள்' என்கிற நூலையும், தன்யா ரென்யத் எழுதிய 'இஸ்ரேல்-பாலஸ்தீனம்' என்கிற நூலையும் படித்தபோதுதான் இப்பிரச்சினையின் அடிப்படையை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள் முடிந்தது.

கேள்வி: பல்வேறு சாகசங்கள் நிறைந்த இந்தப் பயணக் குழுவில் நீங்கள் இணைந்ததன் பின்னனி குறித்து விளக்க முடியுமா? பாலஸ்தீன் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பியது ஏன்?

பதில்: டிசம்பர் மாதம் காஸாவுக்கு ஒரு ஆசியக் குழு செல்லவிருப்பதாகவும், என்னை அதற்கு விண்ணப்பிக்கும்படியும் நண்பர் கேட்டுக்கொண்டார். உடனே நான் அதன் நடைமுறைகளைப் பிந்தொடர்ந்து ஓடினேன். அந்தியா அளவிலான முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் எனக்கு இருந்த நேரடி அறிமுகம், எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பெரிதும் உதவியது. ஆனால், இது எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலும், அதுவும் சமூகப் பொறுப்புமிக்க, உலகின் மாபேரும் துயரத்துடன் தொடர்புடைய பயணம் என்கிற மகிழ்ச்சியுடனும், பணம் காசு இல்லாதபோதும் எப்படியாவது நண்பர்களின் துணையுடம் கிளம்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டேன். ஏறக்குறைய ஒரு மாத காலம் நாங்கள் கடந்து செல்லப்போகும் எல்லா நாடுகளின் தூதரகங்களையும் முட்டிமோதி விசா வாங்குவது என்பதே பெரும் அனுபவமாக அமைந்தது.

கேள்வி: இது யாருடைய ஏற்பாடு? இப்பயணத்தின் பிரதான நொக்கமென்ன? அம்மக்களுக்காக இங்கிருந்து என்ன கொண்டு சென்றீர்கள்?

பதில் ; இந்தப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர் மும்பையைச் சேர்ந்த 'ஃபிரோஸ் மித்தீபோர்வாலா'. அவர்தான் இந்த ஆசிய பயணக் குழுவை ஒழுங்கு செய்தவர். இந்தப் பயணக் குழு ஆசியாவின் 18நாடுகளில் இருந்து 160 நபர்களை அழைத்துச் சென்றது. 18 நாடுகளில் இந்தக் குழுவின் நண்பர்கள் அனைவரும் US$1 மில்லியன் ரூபாய் பெறுமானமுள்ள நிதியையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டி, அதனைக் காஸாவுக்கு எடுத்துச் செல்வதுதான் பயணக் குழுவின் பிரதான நோக்கம். உணவுப் பொருட்கள், ஆம்புலன்ஸ், மருந்துகள், அறுவைச் சிகிச்சை கருவிகள், கல்வி தொடர்புடைய உபகரணங்கள், கம்பளி - உடைகள் என காஸா மக்களின் உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் இவை எல்லாம் தருவிக்கப்பட்டன. இந்கப் பயணம் சாலைவழியாகச் செல்வதால் பல்வேறு பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுடன் கை குலுக்கிச் செல்வது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.


கேள்வி: பயணத்தின்போது பல்வேறு நாடுகளினூடாகக் கடந்து சென்றதாகச் சொன்னீர்கள். ஒவ்வொரு நாட்டு அதிகாரிகளின் அனுகுமுறையும், அந்நாட்டு மக்களின் வரவேற்பும் எவ்வாறு இருந்தது?

பதில்: ஈரான், துருக்கி, சிரியா, லெபனான் என வழிநெடுகிலும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இந்த நாடுகளில், பாலஸ்தீன் பிரச்சினை தங்களின் சொந்தப் பிரச்சினை என்பது போன்ற உணர்வுதான் மேலோங்கியிருந்தது. பெண்கள், குழந்தைகள் என பெரும் திரளான மக்கள் தெருக்களில் திரண்டு எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நாடுகளினரசுகளும் எங்களைத் தங்களின் விருந்தினர்களாலவே நடத்தி கெளரவப்படுத்தினார்கள். முகவும் அன்பான உபசரிப்பு எங்களுக்கு வழிநெடுகிலும் காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதுதான் அவர்கள் பாலஸ்தீனத்தின் பால் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு.

கேள்வி: இப்பயணக் குழுவில் யார் யார் இடம்பெற்றிருந்தார்கள்? முக்கிய பிரபலங்கள் யார்?

பதில்: இந்தப்பயணக் குழுவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருந்தன. இது ஒரு பெரும் வாழ்வியல் அனுபவமாக அமைந்தது என்றே சொல்லலாம். மகசாசே விருதுபெற்ற சந்தீப் பாண்டே, தெஹல்கா முதன்மை ஆசிரியர் அஜித் சாஹி, வகுப்புவாதத்தை எதிர்த்து சுதந்திரமாக இயங்கிவரும் சுரேஷ் கர்நார் என ஏராளமான ஆளுமைகளுடன் 40 நாட்களை உரையாடிக்களிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இவர்களையெல்லாம் தில்லியில் சந்திப்பதே கடினம். ஆனால், இவர்களுடன் தினமும் பலமணிநேரம் உரையாடல்கள், விவாதங்கள், சர்ச்சைகல், கருத்துப் பரிமாற்றங்கள் என ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் புதிதாய் விடிந்தது.

கேள்வி: உங்கள் பயணத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத - நெகிழ வைத்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்: இந்தப் பயணம் முழுவதுமே மறக்க முடியாத நினைவுகள்தான். முதலில்,எங்களுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்தது. ஒருவழி பாகிஸ்தான் விசா வழங்கிய நிலையில், இந்திய அரசு 'வாகா' எல்லையைக் கடக்க அனுமதி வழங்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் வாகா எல்லையில் நாங்கள் நடத்திய போராட்டம் மறக்க முடியாதது. ராணுவம் சூழ நாங்கல் வாகாவின் இந்திய எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதேநேரம், எல்லையின் மறுபுறம், பாகிஸ்தானில் எங்களை வரவேற்க அன்று காலை முதல் காத்திருந்த நண்பர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்லையின் இருபுறங்களிலும் நடந்த இந்தப் போராட்டம் சர்வதேச செய்தியாக மாறியது.

அதனையடுத்து காஸாவுக்கு செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, 'சலாம்' என்ற கப்பல் கிளம்பிய சில மணிநேரங்களில், இஸ்ரேலின் போர்க்கப்பல்களும், விமானங்களும் அதனைத் தொடர்ந்து மிரட்டியதுதான் இப்பயணத்தின் அரசியல் விளைவு உச்சமாக வெளிப்பட்ட தருணம், அனைவரையும் நெகிழ வைத்த தருணமும் கூட.

கேள்வி: பாலஸ்தீன் மண்ணில் கால் வைத்தவுடன் உங்கள் மனநிலை எப்படி இருந்தது? கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக அறிமுகமான காஸாவை, நேரில் கண்டபோது என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்? காஸாவின் இப்போதைய நிலை என்ன?

காஸாவின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிக்கும் நாங்கள் சென்றோம். அல் ஷத்தி, புரேஜி, மக்ஹஸ், தேர்-அல்-பலாஹ், நுஸைரா, ராஃபா, ஜபலியா, தல்அஸ் சுல்தான் என எல்லா முகாம்களுக்கும்சென்று வந்தோம். (Al Shati, Bureji, Maghaz, Deir al- Balah, Nuseirat, Rafah, Jabalia, Tall as-Sultan ). அதன்பிம் அல்-ஷிபா (Al Shifa) மருத்துவமனைக்கும் சென்றோம். அங்குள்ள பாசர் அரஃபாத் சர்வதேச விமான நிலையம், 1998யில் இஸ்ரேலால் முற்றிலும் நாசமாக்கப்பட்டது. அது முதல் அங்கு நிர்மானப் பணிகள் நடைபெறவில்லை.

பாலஸ்தீனின் ரஃபாவுக்குள் நுழைந்தபொழுது இரவு 12 மணிக்கு மேல் இருக்கும். அங்குள்ள ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாலஸ்தீன் அரசு (Palastine Authority) எங்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தது. அதன்பின் எங்களைப் பேருந்துகளில் ஏற்றி தங்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்கள். இருளில் எதையும் காண இயலவில்லை. அன்றைய இரவு தொடர் உரையாடல்களுடன் நீண்டு சென்றது.

அடுத்த நாள்காலை சிற்றுண்டியை வேகமாக முடித்துவிட்டு எங்களைப் பேருந்துகளில் ஏற்றி, எங்களின் காஸா நிகழ்ச்சிநிரலை தொடங்கினார்கள். பேருந்தின் சக்கரங்கள் நகரத் தொடங்கியதும் ஒரு பெரிய அமைதி நிலவியது. திரும்பும் திசையெல்லாம் குண்டுவெடிப்பில் சேதமடைந்த கட்டிடங்கள், சிதைந்த மருத்துவமனைகள், பிளந்து கிடக்கும் பல்கலைல் கழகங்களின் துறை கட்டிடங்கள், ஊனமடைந்த சிறுவர்கள், பெரியவர்கள், குழந்தைகளைச் சுமந்தபடி உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் தாய்மார்கள் என ...

இவையெல்லாம் ஏற்கனவே படித்து அறிந்தபோது ஏற்படுத்திய உணர்வுகள் வேறு. ஆனால், ஒரு யுத்த பூமியை நேரில் காண்பதென்பது முற்றிலும் வேறான ஒரு 'மனம்சார் வேதியியல்' என்றே சொல்ல வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக தொடர் தாக்குதல்களைச் சந்தித்த நிலப்பரப்பு என்பது அதனைக் காணும்போதே தழும்பேறித் தெரிந்தது. என் அன்றைய தினம் முழுவதும் அழுகையும், விசும்பலுமாகத்தான் கழிந்தது. என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

ஹமாஸின் ஒரு அதிகாரி என் தோள்பட்டையைத் தட்டிக் கொடுத்து, 'நன்றாக மனம்விட்டு அழுகுங்கள்; காஸா வருபவர்கள் எல்லோருமே இப்படித்தான் அழுவார்கள். நீங்கள் பார்க்கும் இந்தக் காட்சிகளை உலகிற்கு எடுத்துச் சொல்லுங்கள்' என்றார். உலகத் தொடர்புகள் எல்லாம் முற்றாக மறுக்கப்பட்டு, ஒரு தீவைப் போல்தான் காஸா இன்று காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனை கடல், நிலம், அகாயம் என எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 5.கி.மீ நிலத்தொடர் மட்டுமே இந்த உலகத்துடன் அவர்கள் உரையாடுவதற்கான ஒரே பாதை.

இருப்பினும், எகிப்து அதிபர் முபாரக் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைப்பாவையாக இருந்ததால், காஸாவுக்கு இந்தப் பாதையும்கூட முற்றாக ஒரு தடைதான். பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை என மருத்துவத்திற்கும் கூட காஸாவை விட்டு வெளியெ வர இயலாத நிலை உயர் படிப்புக்கு வர இயலாத சூழல். வேலை வாய்ப்புகள் தேடி இளைஞர்கள் வெளியே வர இயலாத நிலை என .. உலகில் உள்ள அத்தனை தடைகளும் காஸா மற்றும் மேற்குக்கரை என எங்கும் அமலில் உள்ளது.

காஸாவைப் பொறுத்தவரை அதன் 350சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். போதாக்குறைக்கு, இலவச இணைப்பாக இஸ்ரேல் அவர்களின் வான்மீது குண்டுமழை பொழிகிறது. இஸ்ரேலுடனான 70 கி.மீ. எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கி.மீ தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள்ப்படாத திறந்த வெளியான (Buffer Zone) இந்த நிலப்பரப்பு, விவசாயத்திற்கும் தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிச்சமுள்ள இடத்தில் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது, ஒரு சதுஅர கி.மீ,க்கு 4118 பேர். இதுதான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி.

இவ்வளவு தாக்குதல்களையும், சோதனைகளையும் சந்தித்த பின்னரும், அந்த மக்களின் மனோனிலை எவ்வாறு உள்ளது? அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

அங்குள்ள பல குடியிருப்பு வளாகங்களுக்கும், வீடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் வீடுதோறும் பலரைப் பலி கொடுத்துள்ளார்கள் அம்மக்கள். அனைவரின் வீடுகளிலும் கொல்லப்பட்ட தியாகி(ஷஹிது) களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டு உள்ளது. அவர்களின் வீட்டின் மீது குண்டுவிழுந்து சேதமடைந்த பகுதிகளையெல்லாம் அவர்கள் மிகுந்த பெருமிதத்துடன் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பலமுறை விழுந்ததை ஒரு விருது பெற்ற உணர்வுடன் தான் அவர்கள் விவரிக்கிறார்கள்.

பொதுவாக, காஸாவில் உள்ள மக்கள், தங்களை இந்த உலகம் கைவிட்டதுபோல் உணருகிறார்கள். பாலஸ்தீன நுடன் நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு வர்த்தமே. இருப்பினும் காஸாவின் ஒர் அங்குலத்தைக்கூட இனி விட்டுகொடுக்க இயலாது என்பதில் அம்மக்கள் அனைவரும் மிக உறுதியாக உள்ளனர்.'எங்களுக்கு நிவாரணங்களைவிட உங்கள் ஆதரவுதான் பெரியது' என்று பல பெரியவர்கள் எங்கள் கைகளைப் பற்றி கூறிய வார்த்தைகள், அவர்களின் அரசியல் தெளிவையும், மனத் திடத்தையும் காட்டியது.

ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில், அடுத்தநாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில் அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன்போரிடுவதைப் பார்க்கும்போது, நம் நாட்டில் உள்ள நிலையை யோசிக்கவே வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு இழக்க இனிஎதுவும் இல்லை; நம்மிடம் இழக்க இன்னும் ஏராளமாக உள்ளன.

பாலஸ்தீன் முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் அரசியல் சமூக வாழ்க்கைத் தரம் எவ்வாறு உள்ளது? மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அவர்களுக்குத் தடையின்றி கிடைக்கிறதா? தொழில் அல்லது வருமானத்திற்கு என்ன செய்கிறார்கள்? அம்மக்கள் சந்திக்கும் சமூக அவலங்கள் என்னென்ன?

அங்குள்ள பள்ளிவாசல்கள் அடிக்கடி இஸ்ரோலின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. நான் சென்ற பல பள்ளிவாசல்களில் மராமத்து வேலை நடை பெற்றுக்கொண்டிருந்தன. அங்கும் ஏழைகள், கொஞ்சம் வசதி படைத்தோர், பணக்காரர்கள் எனும் வேறுபாட்டைக் காண முடிந்தது. வீடுகளில்வசிப்பவர்கள், முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். கைத்தொழில் செய்பவர்கள்,சிறிய மூலதனத்தில் தொழில் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சிறு பாத்திகளில் விவசாயம் செய்பவர்கள், குண்டுகள் விழுந்து நொறுங்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை எல்லைப் பகுதிக்கு எடுத்து வந்து, மீண்டும் அதனைக் கட்டிடம் கட்டும் கச்சா பொருளாக மாற்றுபவர்கள் என பலதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் அங்கு உள்ளனர்.

இருப்பினும், மிக விசித்திரமானது; அங்குள்ள ரஃபாவின் இரு புறங்களிலும் உள்ள வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் சுரங்கம் அமைத்து, அது வழியாகத்தான் எல்லாப் பொருட்களையும் இங்கு எடுத்து வருகிறார்கள். எகிப்து - ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள், காஸாவுக்கு வரும்பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது. 'சுரங்கம் வெட்டுதல்' அங்கு ஒரு மிகப்பெரும் தொழிலாகவே உள்ளது. இந்தச் சுரங்களின் மீது கூட ஏவுகணைத் தாக்குதல் நடப்பது மிகவும் சகஜமானது.

அதேபோல் இங்கு மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடான விஷயம். மின்சாரத்தை மிக கவனமாகவே செலவிடுகிறார்கள். அங்கு பல மணிநேரம் மின்வெட்டு உள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள், காஸாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. எகிப்து, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்துதான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்னையும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதிலிருந்தும் அங்கு ஏராளாமான குழுக்கள் பலவித நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வந்தாலும், அங்கு யாரும் கட்டுமானப் பொருட்களையோ, மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களையோ எடுத்துச் செல்ல முடியாதபடி தடை உள்ளது. அவர்களுக்காக நாங்கள் வாங்கிய 4 பெரிய லேசார் ஜெனரேட்டர்களைக் கூட சிரியாவிலேயே அந்தப் கப்பலில் ஏற்ற மறுத்துவிட்டார்கள்.

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிய அளவில் சிதைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் அம்மக்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்கிறதா?

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பல்கலைக் கழகங்களின் ஆய்வுக் கட்டிடம் தான் அவர்களின் முதன்மை இலக்கு. மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தது இல்லை. படுக்கை வசதிகள் இல்லாததால், ஏராளமான நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலர் மருந்துகளும், கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து மடிகிறார்கள். உயிர் காக்கும் பலவகை மருந்துகள் தொடர்ந்து இல்லை அல்லது பற்றாக்குறையாகவே உள்ளது. ஆனால் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் பிற ஊழியர்களும் ராணுவ வீரர்கள் போல் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்ந்து மடிவார்கள்.

அரசியலில் காஸா மக்களின் ஆதரவு யாருக்கு?

அங்கு 'ஹமாஸ்' தான் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அமைப்பாக உள்ளது. அவர்கள் காஸாவின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறார்கள். 'பாத்ஹ்' மேற்குக்கரையில் ஆட்சியில் உள்ளபோதும், கொள்கை ரீதியாக மிகவும் நீர்த்துவிட்டார்கள். மேற்குக் கரையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸின் பல தலைவர்களை 'பாத்ஹ்' சிறை வைத்துள்ளது. இந்த இருபெரும் அரசியல் இயக்கங்களின் பிளவு, இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

தமது சிந்தனையாலும், கொள்கை உறுதியாலும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக் கனவுகளுக்கு உற்சாகமூட்டி வந்த சிந்தனையாளர் எட்வேட் சயீத் முதல் மேற்குக்கரை குடியேற்றத்திற்கெதிராக மனிதக் கவசமாக நின்று போராடி உயிர் நீத்த ரேச்சல் கோரி வரையிலான மகான்களின் நினைவுகள் அந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஆதாரமாக உள்ளது?

எட்வேட் சயீத் முதல் ரேச்சல் கோரி வரை அனைவரும் தியாகிகளாக இன்றும் அம்மக்களின் போராட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். காஸா மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது அவர்களைக் காணும்போதே தெரிகிறது. வெளி உலகில் இருந்து அங்கு வருபவர்களிடம் கூற, அவர்களிடம் ஓராயிரம் கதைகள் உள்ளன. 1948, மே 15 ஆம் நாள் நடந்த 'நபகா'வை அவர்கள் நேற்று நடந்தது போல் நம்மிடம் விவரிக்கிறார்கள்.

இஸ்ரேல் இவர்களின் 675 கிராமங்களையும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களையும் தாக்குதல் தொடுத்து தன் வசம் எடுத்துக்கொண்டது. அதில் 476 கிராமங்களை அது முற்றாக அழித்துவிட்டது என்பதை அவர்கள் விவரிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை. பல சமயங்களில் அவர்களின் மொழி எனக்குப் புரியாத போதும் அவர்களின் உணர்வுகள் நம் மனங்களில் ஆழமாகப் படிகிறது. உலகம் முழுவதும் துயரத்தின் மொழி, வலி என எல்லாம் ஒரே அலைவரிசையில் தானே இயங்குகிறது. 60 ஆண்டுகள் கழித்த பிறகும் தங்களின் கிராமங்களுக்கு திரும்ப வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வாழும் மூதாட்டிகளைக் காணும் போதுதான் அவர்களின் அரசியல் உறுதி நமக்கு விளங்குகிறது.

அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு, உள்ளூர் தரப்பில் எத்தகைய ஆதாரவு கிடைத்து வருகிறது? சில யூதக் குழுவினர் கூட பாலஸ்தீனர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அறிகிறோம். அதன் உண்மை நிலை என்ன?

உலகம் முழுவதும் யூதக் குழுக்கள், பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த பதிவுகளை நானும் வாசித்திருக்கிறேன். நாங்கள் ஈரானிலும், லெபனானிலும் பயணித்தபோது பல ஊர்களில் எங்களுக்கு நடந்த வரவேற்பு கூட்டங்களில் யூதர்களும் கலந்துகொண்டு அம்மக்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

என்னுடைய அனுமானம் என்னவென்றால், இப்படியான குழுக்களின் நடவடிக்கைகளுக்கு உலக ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரம்; உண்மையிலேயே காஸா மற்றும் மேற்குக்கரை மக்களுக்கும், உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் 80 லட்சம் பாலஸ்தீன் அகதிகளுக்கும் கூட பல சமயங்களில் கிடைத்ததில்லை. யூதர்கள் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெயர் அளவிளான விஷயமாக இல்லாமல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு வளர வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

காஸா, ரமலா, மேற்குக்கரை போன்ற பகுதிகளிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்ட மக்கலின் இன்றைய நிலை என்ன? அவர்களில் யாரையேனும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா?

இன்று பாலஸ்தீன் பிரச்சினையை உலகம் முழுவதிலும் முன்னின்று தலைமையேற்று நடத்தும் தலைவர்களில் 90 சதவீதம் பேர் அகதி முகாம்களில் பிறந்தவர்கள் தான். அவர்களில் பலர் இதுநாள் வரை பாலஸ்தீனத்திற்கே சென்றதில்லை. சிரியா, லெபனான், ஜோர்டான் என அரபு தேசம் எங்கும் பாலஸ்தீன அகதிகள் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களின் முகாம்கள் பெரும் நகரங்களாகவே உருமாறியுள்ளன. இந்த நாடுகளில் பாலஸ்தீன அகதிகளுக்கு சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளது. எல்லாம் இருந்தபோதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில், எங்களுக்குச் சிறப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த முகாமில் உள்ள குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினோம். கால்பந்துதான் இவர்களை உலகுடன் இணைக்கும் மொழியாக உள்ளது. எங்களுடன் முதலில் பேச மறுத்த குழந்தைகள், விளையாட்டுக்குப் பின் தினமும் எங்களைச் சந்திக்க சிரியாவின் துறைமுக நகரமான லத்தாக்கியாவில் உள்ள விடுதிக்கு வந்தார்கள். சொல்லப்போனால், இந்த அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இருக்கும் உத்திரவாதங்களும், பாதுகாப்பும் காஸாவில் வாழும் மக்களுக்கே இல்லை.

பாலஸ்தீன் பிரச்சினையில் பிற அரபு / முஸ்லிம் நாடுகளின் அணுகுமுறை குறித்து அம்மக்களின் கருத்து என்ன?

அரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு கிடப்பதுதான் இஸ்லாமைச் சூழ்ந்துள்ள பெரும் நெருக்கடியாக நான் பார்க்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகின்றன. அமெரிக்கா எண்ணெய்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஜனநாயகத்துடன், மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழ வேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாக அரசுகளை நிறுவி, கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைப்படித்தான் இந்தப் பகுதி மாற்றி மாற்றி அடுக்கப்படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், நான் பயணித்த நாடுகளில் எல்லாம், பாலஸ்தீன் பிரச்சினை என்பது அவர்களின் சொந்தப் பிரச்சினையகவே கருதப்படுகிறது. முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் ஷியா- சன்னி பிளவு, ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படத் தடையாக உள்ளது.

பாலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரை, "உங்களின் சொந்த விருப்பு - வெறுப்புகளை எங்களின் விஷயத்திலாவது விலக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து போராடுங்கள்" என்கிற வேண்டுகோளோடும், இந்த ஒற்றுமையான போராட்டம் மொத்த பகுதியின் விடுதலைக்கான போராட்டமாக மலரும் என்கிற நம்பிக்கையோடும் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

ஹமாஸ் - பாத்ஹ் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா? அவர்கள் தரப்பிலிருந்து எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்தது? வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?

ஈரான் சென்றிருந்தபோது, அந்த நாட்டின் அதிபர் அஹமதின் நிஜாத், எங்கள் பயணக் குழுவை தெஹ்ரான் பல்கலைக் கழகத்திற்கே நேரில் வந்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், எங்களுக்குப் பெரும் அரச விருந்தும் அளித்தார். உணவுக்குப் பின் அவர்களின் தொன்மையான பாராளுமன்றமான மஜ்லிசில் ஒரு பாராட்டு விழாவும், ஈரானின் பாரம்பரியம் மிக்க வெள்ளி மோதிரமும் எங்களுக்கு அணிவித்தார்.

ஈரானின் அனைத்க்டு நகரங்களிலும் வரவேற்பும், விருந்தும் அந்தந்த நகரங்களின் மேயர்களே ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர, ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது. எங்களை வரவேற்க சிரியாவின் அரசாங்கமே எல்லைக்கு வந்தது. தலைநகர் டமாஸ்கசில் நாங்கள் ஒருவார காலம் தங்கியிருந்தோம். அங்குள்ள எல்லா அரசியல் குழுக்களும் எங்களைத் தினமும் வந்து சந்தித்து, பாலஸ்தீன் தொடர்பாக உரையாடி, விவாதங்களும் நடத்தினர்.

ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் எங்களுடன் ஐந்து மணி நேரம் செலவிட்டார். மொசாதின் தாக்குதல்களால் பலமுறை மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்த காலித் மிஷ்அல் அவர்களைச் சந்தித்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நெகிழ்வான சந்தர்ப்பம்.

பாலஸ்தீன் அரசின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா அவர்களையும் சந்தித்தோம். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் காஸாவில் உள்ள அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பல அடுக்குப் பாதுகாப்புடன் இந்தக் கூட்டம் நடந்தது. காஸாவின் மனநிலை எத்தகைய கொந்தளிப்புடன் உள்ளது. அவர்களின் எதிர்பார்புகள் என்ன என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் சார்ந்த தெளிவு எனக்குக் கிடைத்தது. இருப்பினும் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து எங்களை அரசு சார்பாக வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் அளித்தது.

பாத்ஹ் - ஹமாஸ் அமைப்புகள் சில புள்ளிகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. பாத்ஹ் மேற்குகரையில் ஏராளமான ஹமாஸ் ஊழியர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதுதான் இந்த நடைமுறைக்குத் தடையாக உள்ளது. இந்தக் கைது நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் பாத்ஹ் அமைப்பை பாராட்டியுள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Viva Palestina, Free Gaza ஆகிய பல்வேறு அமைப்புகளின் மூலம் இதற்கு முன்பே காஸா வந்து சென்ற அனுபவம் உள்ள பலர் எங்களுடன் வந்ததும், அவர்களின் அனுபவங்களும் பல புதிய வெளிச்சங்களை அளித்தது.

இந்தியாவின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து, அந்த இயக்கங்களின் தலைவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள்?

இஸ்ரேலின் ஆயுதங்களில் பெரும் பகுதியை வாங்கிக் குவிக்கும் நாடுதான் இந்தியா. இந்தியா ஆயுதங்களை மட்டும் வாங்கிக் குவிக்கவில்லை; மாறாக இஸ்ரேலுடன் பல கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டுள்ளது.

நாங்கள் காஸாவுக்குள் நுழைந்த அதேநேரம், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ஒரு குழுவுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்தார். சமீபமாக இந்திய இஸ்ரேல் வர்த்தகம் தொடர்புடைய ஒரு மாநாட்டுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இருக்கும் இந்திய மக்களின் மந்தையான மனோபாவத்தில் இதுவெல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத இந்த கூட்டம், பாலஸ்தீன் - இலங்கை என எதற்கும் எழுந்திடாது.

ஹமாஸ் இயக்கத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் இதர சமூகப் பணிகள், அறப்பணிகள் குறித்துச் சொல்ல முடியுமா? உலகப் புகழ்பெற்ற கொரில்லா போர் முறைக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள், அதில் அவர்கள் வெற்றியடைந்தாக நினைக்கிறீர்களா?

ஹமாஸ் அமைப்பு 1987யில் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே தொடங்கப்பட்டது. 'இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்தை மீட்டெடுப்பதற்கே ஹமாஸ் நிறுவப்பட்டது' என அதன் நிறுவனர் ஷேக் அஹமது யாசின் அறிவித்தார். ஹமாஸின் 'மஜ்லிஸ் அல் -ஷூரா' தான் அரசியல் திட்டத்தை தீர்மானிக்கும் தலைமைக் குழு. அகதிகள் முகாம்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது முதல் விளையாட்டு, இலவச உணவு விடுதிகள், அனாதை இல்லங்கள், மசூதிகள் என ஹமாஸ் தனக்கு கிடைக்கும் நிதி உதவிகளில் 90 சதவீதத்தை இது போன்ற நலத் திட்டங்களுக்குச் செலவிடுகிறது.

பாலஸ்தீனில் நான் பார்த்தவரை, உலக ஊடகங்கள் கூறுவதுபோல் பெரும் ராணுவ பலம் பொருந்திய படைகள் எல்லாம் இல்லை. மாறாக அங்கு இருப்பது ஒரு தற்காப்புப் படை (Self Defence Force) மட்டுமே. இஸ்ரேல் இவர்களின் பகுதிகளுக்குள் வந்து தாக்கும்போது மட்டுமே இவர்கள் தங்களின் கொரில்லா தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், அவ்வலவே.

உங்கள் பயணத்தின் பிரதான விளைவு என்ன? தொடர் நடவடிக்கை என்ன?

எங்கள் பயணம் பல வழிகளில் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது. காஸாவுக்கு இதுவரை ஏராளமான பயணக் குழுக்கள் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன. ஆனால் 'மாவி மர்மரா' தாக்குதலுக்குப் பிறகு, உலக ஊடகங்களின் முக்கியச் செய்தியாக 20 நாட்கள் பரபரப்பாக இருந்தது, இந்த ஆசியா காரவான் பயணக்குழுதான். வாகா எல்லையில் இந்திய/ பாகிஸ்தான் அரசுகளைக் சமாளித்துச் சென்றது முதல் எகிப்து விபத்து வரை காஸா பற்றியும் அங்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரணப் பொருட்கள் பற்றியும் செய்திகள் வந்தவன்ணம் இருந்தன.

இன்று இந்திய தேசத்திற்கு ஆசியாவிலிருக்கும் மதிப்பு என்ன என்பதையே இந்தப் பயணத்தில்தான் முழுப் பரிமாணத்துடன் விளங்கிக் கொள்ளமுடிந்தது. இந்த ஆசியா காரவானில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது மக்களாலும், அரசுகளாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. இரு நாடுகளின் அதிபர்கள் ஒரு பயணக் குழுவை நேரில் வந்து வாழ்த்தியது இதுவே முதல் முறை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் பாலஸ்தீனத்திற்கு வருவது அந்த மக்களைப் பெரிதும் நம்பிக்கையில் ஆழ்த்தியது.

ஆனால், மறுமுனையில் தினம் தினம் எங்களை 'தீவிரவாதிகளின் பயணக்குழு' என்று இஸ்ரேல் அதன் இணையதளங்களில் வசைபாடியது. இது, இஸ்ரேலுக்கு இந்தியப் பங்கேற்பு சார்ந்து ஏற்படுத்திய ஒவ்வாமைதான் என்று ராணுவ - வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியர்களின் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது தான் இந்தப் பிரதேசத்தின் கோரிக்கையாக இருந்தது.

முதலில், இந்தப் பிரச்சினையை ஆழமாக அறிந்து கொள்வது அவசியம் என்பதால், கடந்த மூன்று மாதங்களாக தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வாசிப்பு அடுத்தடுத்து பல ஆய்வாளர்களை நோக்கி ஒரு கண்ணியாக நீண்டு செல்கிறது. இருப்பினும், வாசிப்பும், நடவடிக்கைகளும் இணையாக நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்தேன்.

நாடு திரும்பியதிலிருந்து இப்பயணத்தில் இணைந்த 7பேர் தொடர் நடவடிக்கைகளுக்காகத் திட்டமிட்டு வருகிறோம். இஸ்ரேல் - பாலஸ்தீனம் அமைதி நடவடிக்கைகள், 1967 எல்லையுடன் இருநாடு பிரகடனம், காஸா மீதான தடைகளைத் தளர்த்த வலியுறுத்தல் என பல திசைகளிலான நடவடிக்கைகளை ஆசிய அளவில் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அமைப்பும், அதன் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பையும் வெளியிட உள்ளோம்.

இப்பயணத்தில் ஏற்பட்ட கசப்பான, மன்னிக்க முடியாத அனுபவம் ஏதேனும்?

இந்த மொத்தப்பயணத்தில் எங்களை மிகவும் கேவலமாக நடத்தியது எகிப்து மட்டுமே. எகிப்து ராணுவமும் காவல்துறை அதிகாரிகளும் எங்களைக் குற்றவாளிகளைப் போலவே நடத்தினார்கள். எங்களை இப்படி நடத்தி, தங்களின் எஜமானர்களான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிக்கு மீண்டும் ஒருமுறை விசுவாசத்தை நிருபித்தார்கள். எங்களின் பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்துவிட்டு அதனை திருப்பித் தரவும் மறுத்தனர். மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி எங்களிடமிருந்து ஏராளமான பணத்தைப் பறித்தார்கள்.

பிறகு அதைவிடவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி அங்கிருந்து கெய்ரோ நோக்கி அழைத்து சென்றனர். போகும் வழியில் எதிர்பாரா விதமாக ஒரு பெரிய விபத்தைச் சந்தித்து பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோம். எனக்கு முழங்காலிலொரு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதால் தப்பித்தேன். இருப்பினும், நடுங்கும் குளிரில் வெட்டவெளியில் நங்கள் அரவைக் கழித்தோம். எகிப்து நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் இந்த விபத்து குறித்து கவலைப்படவேயில்லை. அதன்பின் நாங்கள் அந்தச் சாலையை மறித்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த பின் தான் ஒரு வழியாக காரியங்கள் நகர்வு பெற்றன.

கெய்ரோ விமான நிலையத்திலும் எங்களை அறைகளில் அடைத்து வைத்து விமானம் புறப்படும் கடைசி நேரத்தில்தான் வெளியே விட்டார்கள். இதுதான் காஸா செல்பவர்களை எகிப்து அரசு நடத்தும் முறை என்று வந்தபிறகுதான் அறிந்துகொண்டேன். இருப்பினும், இந்த இடர்கள் எல்லாம்தான் எங்கள் பயணத்தை மேலும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றியது.

துருக்கி அனுபவம் எப்படி இருந்தது?

துருக்கியின் வான், தியார்பகீர், காசியான் டெப், ஆகிய ஊர்களின் வழியே நாங்கள் சிரியா நோக்கிப் பயணித்தோம். துருக்கியில் எங்களுக்கு முழுக்க வழிகாட்டுதலும் உபசரிப்பும் செய்தது ப்ரீடம் பளோட்டில்லாவை ஏற்பாடு செய்த ஐ.ஹெச்.ஹெச். (Q-IHH – Insani Yardin Vakfi) எனும் அமைப்புதான். முழுக்க கூடைப்பந்து மைந்தானங்களில்தான் இரவு தங்கினோம். துருக்கியின் மிக அழகான நிலப்பரப்பு, பனி மழைகள், உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாத நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது.

மாவி மர்மரா கப்பலில் கொல்லப்பட்ட Cengiz Akyuz (42), Ali Haydar Bengi(39), Ibrahim Bilgen(61), Furkan Dogan(19), Cevdet kiliclar(38), Cengiz Songur(47), Cetin Topcuoglu (53), Fahri Yaldiz (43), aun Necdet Yildirim(32) ஆகியோர் பற்றிய நினைவுகள் சதா அலைக்கழித்தன. அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட மயானக் கரைக்குச் சென்றது பெரும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

நான் ஏற்கனவே இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐ.ஹெச்.ஹெச். வெளியிட்ட விரிவான அறிக்கைகளையும் வாசித்திருக்கிறேன். இப்பயணத்தில் ஒருநாள் மாலை ஐ.ஹெச்.ஹெச். அலுவலகம் சென்று அவர்கள் வசம் இருந்த விரிவான குறுந்தகடுகள், பிரசுரங்களையும் பெற்று வந்தேன். இந்தப் பயணத்தில் ஐ.ஹெச்.ஹெச்.யின் ஊழியர்கள், செயல்பாட்டாளர்கள் மிகப்பெரும் ஆதர்ஷமாக அமைந்தார்கள். அவர்களின் சுறுசுறுப்பு, தெளிவு, வேலை செய்யும் முறை, நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் மனதை வெகுவாக ஈர்த்தது.

இப்பயணத்தில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கும் சென்றீர்கள். அங்கு உங்களுக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் ஏதேனும்?

நல்ல கேள்வி, இந்த மொத்த பயணமும் இஸ்லாமுயப் பெண்கள் குறித்தான எனது பார்வையை மாற்றியது என்றே சொல்லலாம். பொதுவாக, இந்திய ஊடகங்களில் ஈரான் குறித்த இறுக்கமான, பழமைவாதப் பார்வைகள் தான் நிறையப் புழங்குகின்றன. எனக்கு மின்னஞ்சல்களில் வரும் செய்திகளிலும் ஈரான் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் குறித்தும், இஸ்லாம் சமயம் குறித்தும் எத்தனையோ அவதூறுகளை இங்குள்ள இந்துத்துவாவினர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். என்பது பட்டவர்த்தனமாகப் புரிகிறது. குறிப்பாக, ஈரானில் பென்களுடன் பேசுவது குற்றம்; பழகுவது குற்றம் என்கிற அளவில்தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆனால், நாங்கள் அங்கு சென்றபோதுகண்ட காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு நின்று எங்களை வரவேற்றனர். அங்கு வாழ்ந்து கோஷங்களை எழுப்பியதும் பெண்கள்தான். பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட எல்லாமே எங்களைப் பிரமிக்க வைத்தன. எங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண் மொழிபெயர்ப்பாளர்கள் ஈரானில் நாங்கள் இருந்த காலம் முழுவதுமுடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈரானின் மிகப்பெரிய மசூதிகளில் கூட அதனை பராமரிக்கவர்களாக பெண்கள் இருந்தனர்.

தெஹ்ரானில் உள்ள அவ்ர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சென்றபோது, அங்கும் எனக்கு பெரும் ஆச்சரியமே காத்திருந்தது. நான் பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பதால், நான் அங்கு மாடிகளில் உள்ள படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். அத்தனை மாடிகளிலும் தொழில் நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள், உதவியாளர்கள் என அந்தத் தளம் முழுவதும் பெண்களே நிரம்பி இருந்தனர். இப்படி ஒரு படப்பிடிப்புத் தளம் என்பது நம் இந்தியாவில்கூட யோசித்துப் பார்க்க இயலாது.

ஈரானில் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களைச் சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிகலாவகமாக உரையாடினார்கள். ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்களை இன்னொரு சந்தர்பத்தில் எழுதத்தாம் வேண்டும்.

இந்தப் பயணக் குழுவில் உங்களுடன் வந்த டாக்டர் சந்தீப் பாண்டே, 'காஸா மக்கள் ஒருபோதும் தோல்வி அடையமாட்டார்கள். அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்கிறார். நமது ஊடகங்கள், அவர்களைக் கல் வீசுபவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றன. காஸா மக்கள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

சந்தீப் பாண்டேயின் கூற்று முற்றிலும் உண்மையே. பாலஸ்தீன் - காஸா மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. 60 ஆண்டுகளாக இத்தனை தாக்குதல்களைக் சந்தித்தவர்கள், மனம் தளராதவர்களாக இன்னும் இன்னும் எத்தனை துன்பங்களையும், தங்களின் தாய் நிலத்திற்காக சந்திக்க காத்திருப்பவர்களாகவே உள்ளனர். குத்ஸையும் (Al-Quds/Baitul-Maqdis) அல் அக்ஸாவையும் (Al-Aqsa) இன்னொரு முறை பார்த்தால்போதும்; அங்கு ஒருமுறை தொழுதுவிட்டால் போதும்; இந்த மனம் நிம்மதியாகிவிடும் என்பது மட்டுமே அவர்களில் பலரது வாழ்நாள் ஆசையாக உள்ளது.

அவர்களின் மனதிற்கு முகவும் நெருக்கமான ஜெருசலத்தை மீட்க வேண்டும் என்பதும் அவர்களது தீரா ஏக்கம். காஸாவின் பிரதமர் அலுவலகத்தில் கூட ஒரு மைல்கல் உள்ளது. அதில் ஜெருசலேம் 79.37 கி.மீ. என்று பொறிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மரணப் படுக்கையில் மருத்துகளின்றி அவதிப்படுவோர் கூட, ஒருபோதும் தங்களின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்காதவர்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பயணம் நெடுகிலும், காஸாவுக்குள் நுழையும் போதும் 'ஏதோ காஸா மக்களுக்கு உதவச் செல்கிறோம்' என்ற உணர்வுதான் எனக்குள் இருந்தது. ஆனால், காஸாவைச் சுற்றிவிட்டு அந்த மக்களின் உணர்வுகளை எல்லாம் பார்த்தபோது, " நான் இவர்களுக்குச் செய்வதற்கு எதுவுமில்லை; மாறாக, இவர்களிடம் இருந்து நிறைய கற்று வெளியேறுகிறேன்" என்றே உணர்ந்தேன். ஒரு வீரம்செறிந்த போராட்டத்தை இந்த மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் இந்த உலகிற்குப் பல படிப்பினைகளை வழங்குகிறது.

இறுதியாக, நீங்கள் இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னரும், உங்கள் மனதை விட்டு அகலாத நினைவுகள் ஏதேனும்?

நாங்கள் தங்கியிருந்த லத்தாகியாவின் விடுதியில் வரவேற்பு அறையில் இருந்துகொண்டு நான் என் மடிக்கணினியில் தூதரகங்களுக்கான சில கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, பெண்மணி ஒருவர் உள்ளே வந்தார். 'ஆசியாவின் பாலஸ்தீன் பயணக் குழு ' தங்கியிருக்கும் விடுதி இதுதானா? என்று கேட்டார். ஆமாம் என்றதும், நான் பாலஸ்தீன் அகதி முகாமில் பிறந்தது முதலான தன் கதையை மிகச் சுருக்கமாக விறுவிறுவென கூறினார்.

பிறந்தது முதல் அவர் பாலஸ்தீன் சென்றதில்லையாம். பாலஸ்தீனை மீட்பது தொடார்பான சகல சமூக அரசியல் இயக்கங்களிலும் அவர் மிகவும் விருப்பத்துடன் பங்களித்து வருவது மட்டுமே, தான் பாலஸ்தீனை உணருவதற்கான வழிமுறையாகவும், தனது தாய்நிலத்தை நினைவுகளில் சுமப்பதற்கான ஒரே வழி என்றும் கூறினார்.

இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள பாலஸ்தீனர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அதன் பின் சென்றதே இல்லை. அவரது குடும்பம் 1948யில் இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒன்று. தனது தாத்தா - பாட்டி காலத்தில் இருந்தே அகதிகளாக இங்கு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிரியாவில் மட்டுமன்றி லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளிலும் பல அகதி முகாம்கள் உள்ளன. இந்த வளைகுடாவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாலஸ்தீனர்கள் இல்லாத நகரமே இல்லை எனலாம். நாடிழந்தவர்களின் மன நிலை மிகவும் துயரமானது என்பதை அவர்களைச் சந்தித்த மாத்திரத்திலேயே ஒருவரால் உணர முடியும்.

கடந்த 25 நாட்களாக நான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள பாலஸ்தீன் அகதி முகாம்களின் மக்களைச் சந்தித்து வருகிறேன். இந்த நாடுகள் அவர்களை நல்ல முறையில் பாதுகாத்து, வசதிகள் செய்து கொடுத்துள்ள போதிலும், அவர்களின் முகம் எல்லாம் நாடிழந்த தவிப்பு கவிந்து கிடக்கிறது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தங்களின்பள்ளிப் புத்தகப் பைகளிலும், புத்தகங்களிலும் பலவாறு பாலஸ்தீன் சின்னங்களை வரைந்துள்ளனர். பாலஸ்தீன் தொடர்பான பல பாடல்கள் இவர்களின் தேசிய கீதமாக உள்ளது.

அந்தப் பெண், தான் ஒரு சாதாரண வேலையே செய்து வருவதாகவும், அதிகம் படிக்காததால் தனது சம்பளமும் குறைவுதான் என்றும் கூறினார். இதை ஏன் என்னிடம் தெரிவிக்கிறார் என நான் ஒரு கணம் குழம்பிப் போனேன். பேசிக்கொண்டே திடீரென, தன் கை பையில் இருந்து 5,000 சிரிய பவுண்டுகளை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் வாங்க மறுத்தேன். இது எதற்கு என்பதை முதலில் சொல்லுங்கள் என்றேன்.

கண்களில் நீர் ததும்ப, 'இதனை நீங்கள் காஸாவில் சந்திக்கும் ஏதேனும் ஒரு குடும்பத்திடம் கொடுங்கள்' என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே மெல்ல அங்கிருந்து புறப்பட்டார். அவர் கிளம்பியதும் நானும் மெல்ல அவருடன் நடக்கத் தொடங்கினேன். எங்கள் இருவர் மத்தியிலான உரையாடலை மொழிபெயர்த்தவர் விடுதியிலேயே இருந்துவிட்டார். நான் தெருமுனை வரை அவருடன் நடந்தேன். அந்தச் சாலை கடற்கரை வழியாக அகதி முகாம் வரை சென்றது.

நான் கடந்த மூன்று நாட்களாக அந்த முகாமுக்குச் சென்று வருவதால் அந்த சாலையும், பாதையும் நன்கு பரிச்சயமாகியிருந்தது. எனக்கு அரபி தெரியாதது. ஒரு குறையாகவே இல்லை. நாங்கள் அந்த நீண்ட கடற்கரை சாலையைக் கடந்தோம். திடீரென என் தொலைபேசி ஒலித்ததால், நான் என் 'கோட்' பையில் துளாவி அதை எடுத்தேன். அதற்குள் அவள் அருகில் இருந்த நெரிசலான தெருவுக்குள் சென்று மறைந்தாள். நாடிழந்தவர்களின் தூதுவனாக என்னை உருமாற்றி விட்டு, அவள் எங்கோ சென்று மறைந்தாள்.

ஆ.முத்துக்கிருஷ்னன்.

1 கருத்து:

  1. சொடுக்கி கேளுங்க‌ள்

    -----> 1.
    பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

    இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
    அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
    . <<<<<

    ==============


    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    2.
    காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
    மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.


    .

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    3. ---->
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----



    4. ---->
    பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு.
    மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?……..


    5. ---->
    பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    பதிலளிநீக்கு